Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: திருப்பூர் பிரபுநகர் முதல் வீதி பாக்கியா காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் உமர்பாரூக் (வயது 30). இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு உமர்பாரூக் மோட்டார் சைக்கிளில் பாலாஜிநகர் முதல் வீதி பகுதியில் சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அங்குள்ள வீட்டுச்சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட உமர்பாரூக் பலத்த காயமடைந்தார். இரவு நேரம் என்பதால் அந்த வழியாக ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் ரத்த வெள்ளத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை அங்கேயே கிடந்தார். இதனால் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இன்று காலை உமர்பாரூக் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.